Thursday, 7 May 2015

சித்த மருந்துகளின் மூலங்கள்.

அன்புடையீர்,
           வணக்கம். மருந்துகளின் மூலங்கள் பற்றி அறிவோம்.
  
மருந்துகளின் மூலங்கள்
          சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகள் இம்மருத்துவத்தின் சிறப்பை உணர்த்துபவைகளாக இருப்பதை அறிகிறோம். 
 அவை வருமாறு,

1. உப்பு வகைகள் – 25 
2. உலோகங்கள் – 12 
3. உபரசங்கள் – 120 
4.பாடாணங்கள் - 64
5.மூலிகைகள் - 1008
6.கடை மருந்துகள் - 64 

            இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன. 1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் வேறு எந்த மருத்துவ முறையிலும் பயன்படுத்தப்படுவதில்லை எனத் துணிந்து கூறலாம். அதே போல், எல்லா மருத்துவ முறைகளிலும் பொதுவாக 4 வகைகளில் மட்டுமே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால்,  
         சித்த மருத்துவத்தில்  
1. உப்பு
2. பாடாணம்,
 3. உபரசம்
4. இரசம்
5. உலோகம்
6. கந்தகம் 
  என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன.
          மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. 

        மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப்படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே என்பர். 
அவ்வாறு பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,
1. இரசம் செய்முறை 
 2. இரசக் செந்தூரம் செய்முறை
3. வீரம் செய்முறை 
 4. பூரம் செய்முறை
5. அரிதாரம் செய்முறை

      இயற்கையில் கிடைக்கக் கூடிய பாடாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாடாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாடாணங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

      மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், 
 பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

" வயதென்ன நல்லபாம் பொன்றை வாங்கி
மாளாம லதன்விஷத்தை வாங்கிக் கொண்டு
அயதென்ன சூதமொரு கழஞ்சு கொண்டு
ஆலகால விஷத்தில் ஊற்றிக் கொண்டு.''

         நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம்.

           அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை   அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தைகுயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்குஉடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு  போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

        இத்தனை உயிரினங்களும் மருந்திற்குப் பயன்படுவன என்று ஆராய்ந்து காண்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என எண்ணிப் பார்த்தால், இந்த மருத்துவ முறைகள் எத்தனை ஆண்டுகள் பழைமை கொண்டவை என்பது விளங்கும்.

No comments:

Post a Comment